நாமக்கல் பகுதியில் இருந்து, வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், முட்டை விலை உச்சத்தை தொட்டுள்ளது என என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் கூறினார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (என்இசிசி), நாமக்கல் மண்டல அலுவலகத்தில் கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. என்இசிசி மண்டல பொருளாளர் சுந்தரராஜ் தலைமை வகித்தார்.
மண்டல தலைவர் பொன்னி சிங்கராஜ் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது: நாமக்கல் மண்டலத்தில் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் முட்டை விலை உச்ச விலை எட்டியதற்கான முக்கிய காரணம், நாமக்கல்லில் இருந்து, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதியாவதால்தான்.
முட்டைகள் தேங்காமல், மைனஸ் இல்லாமல் விலை தொடர்ந்து நிலைக்க பண்ணையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், இதுவரை இல்லாத விலையாக, முட்டை விலை ரூ.6ஐ தாண்டியுள்ளது என்பது ஒரு மைல் கல்லாகும். அதேவேளையில் குளிர்காலம் நிறைவடையும் வரை முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு உளளது என்று கூறினார்.
முன்னதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். மேலும், முட்டை விலை ரூ. 6ஐ தாண்டி உச்சத்தை எட்டியதற்காக, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், துணைத்தலைவர் சண்முகம் உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன், முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தன், பல்லடம், ஈரோடு, பரமத்தி, மோகனூர், நாமக்கல், புதன் சந்தை, ராசிபுரம் உள்ளிட்ட என்இசிசி வட்டாரக் குழு நிர்வாகிகளும், மத்திய குழு நிர்வாகிகள், நாமக்கல் மண்டல முட்டை விலை நிர்ணய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பண்ணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




