தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2025-26ம் கல்வி ஆண்டில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் வட்ட, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில், தடகளம், குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவிலான பேஸ்பால் தெரிவு போட்டி, திருச்சி மாவட்டம், தோளூர்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. அதில், நாமக்கல் மாவட்டம், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவிஜா 14 வயது பிரிவிலும், 19 வயது பிரிவில் மாணவி கன்சிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், வரும் 2026, ஜனவரியில் டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான பேஸ் பால் போட்டியில் பங்குபெறுவர்.
அதேபோல், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடந்த, மாவட்ட அளவிலான வாள்சண்டை போட்டியில், 19 வயது பிரிவில், இப்பள்ளி மாணவி ரூபாஸ்ரீ முதலிடம், லிசாஸ்ரீ இரண்டாமிடம், 17 வயது மாணவியர் பிரிவில் முத்துமதி, அனிதா, மணிமாலா, அக்ஷயா, 14 வயது பிரிவில் தேஜாஸ்வினி, அகல்யா, ரேணுகா ஆகியோர், 3ம் இடம் பிடித்தனர்.
மாணவர்களுக்கான வாள் சண்டை பேட்டியில், 14 வயது பிரிவில் பூபேஷ், விக்னேஷ், கிஷோர் ஆகியோர் 3ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற 12 பேரும், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டி, வரும், 2026 ஜனவரி மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
மேலும், வட்ட அளவிலான எறிபந்து போட்டியில், 14, 17, 19 வயது பிரிவு மாணவர்கள் முதலிடம், பூப்பந்து போட்டியில் 14 வயது பிரிவில் மாணவர்கள் முதலிடம், 17 வயது பிரிவில் மாணவர்கள் இரண்டாமிடம், கபடி போட்டியில் 17 வயது பிரிவில், மாணவர்கள் முதலிடம், 14 வயது பிரிவில் மாணவியர் முதலிடம் பெற்றனர்.
பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவ மாணவியரையும், உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியசாமி, செல்வராஜ் ஆகியோரையும், பள்ளி தலைமையாசிரியர் புனிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.




