Close
மார்ச் 7, 2026 4:26 மணி

முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைவால் கொள்முதல் விலை அதிகரிப்பு: வியாபாரிகள் சங்க தலைவர் தகவல்

நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், அதன் தலைவர் ஆனந்தன் பேசினார்.

முட்டை விலை உயர்வால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் தெரிவித்தார்.
நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநில அளவிலான முட்டை வியாபாரிகள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் மயில்சாமி, பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிவில் சங்கத் தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், கோவை, திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில் சுமார் 1,300 முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அந்த முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் போக மீதம் உள்ள முட்டைகள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் தற்போது முட்டையின் கொள்முதல் விலை 610 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முட்டைக்கான உச்சபட்ச விலையாகும். முட்டை விலை உயர்வால், முட்டைகளை பதுக்கி வைப்பதாக சிலர் கூறுவது சாத்தியமில்லை. ஒவ்வொரு ஆண்டும் நவ., டிச., மழைக்காலங்களில் முட்டை உற்பத்தி குறையும். அதனால், முட்டை விலை உயரும். இது கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டு நவ., டிசம்பரில், ஒரு முட்டையின் முட்டை அதிகபட்ச விலையாக 520 காசாக இருந்தது. அதேபோல், 2022ல் 550 காசு, 2023ல் 585 காசு, 2024ல் 590 காசு என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு, அதிகபட்ச விலையாக, 610 காசாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு சராசரி முட்டை விலை ரூ. 5 ஆக உள்ளது. கோழிப்பண்ணையாளர்களுக்கு சராசரியாக, ஒரு முட்டைக்கு, 495 காசுதான் கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில், முட்டை உற்பத்தி செலவு, ஒரு முட்டைக்கு 540 காசாகிறது.
வரும் நாட்களில், முட்டை விலை, 600 காசுக்கு மேல் இருந்தால் தான் கோழிப்பண்ணைகளை நஷ்டம் இல்லாமல் நடத்த முடியும். கொரோனா காலத்தில், முட்டை விலை கடுமையாக சரிவடைந்ததால், பலர் கோழிப்பண்ணைகளை நடத்த முடியாமல் முடிவிட்டனர். சில பண்ணையாளர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு சில வியாபாரிகள், கூடுதல் விலைக்கு முட்டை விற்பனை செய்வதாகவும், முட்டை கிடைப்பதில்லை என்றும் சோஷயில் மீடியாக்களில் புகார் தெரிவிக்கின்றனர். இது தவறு, முட்டை வழக்கம் போல், அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், கோழிப்பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை பதுக்கவில்லை. முட்டை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சீனிவாசன், துணைச்செயலாளர் செந்தில்குமார், தூத்துக்குடி முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சவுந்தரபாண்டி, மகேஷ், ஜெயராஜ் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top