விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, எலச்சிப்பாளையம் சிறப்பு எஸ்.ஐ., நடராஜன் மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கொண்டாங்கியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மேலும் சிலருடன் சேர்ந்து, நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி பகுதியில் விவசாய தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, சோழசிராமணியில் இருந்து தனது பைக்கில், மனைவி சத்யாவுடன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். எலச்சிபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அய்யப்பன், அவரது மனைவி சத்யா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு எஸ்.ஐ., நடராஜன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, அவர் அய்யப்பனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, விபத்தில் சிக்கிய பைக்கை ஆய்வுக்கு அனுப்ப ரூ. 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதையடுத்து, அய்யப்பன், தனது உறவினர் ஒருவரின் கூகுள்பே கணக்கில் இருந்து, சிறப்பு எஸ்.ஐ., நடராஜனுக்கு ரூ. 1,500 அனுப்பி உள்ளார். தொடர்ந்து, விபத்து வழக்கில் நிவாரணம் பெற கோர்ட்டில் வழக்கு தொடர வசதியாக அய்யப்பன் தனது வக்கீல் மூலம் சிறப்பு எஸ்.ஐ., நடராஜனை மீண்டும் அணுகினார்.
அப்போது, வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கொடுக்க, ரூ. 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. மேலும், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத அய்யப்பன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு எஸ்.ஐ., நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




