Close
மார்ச் 7, 2026 4:17 மணி

தீபத்திருவிழா: புதுப்பொலிவுடன் ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனம், அதன் சிறப்புகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, இன்று இரவு வெள்ளிப் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா வருகிறார். இது திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாகும். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நேற்று 24 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தனா். உற்சவா் சுவாமிகளை வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

ஐந்தாம் நாள் உற்சவம் 

இந்த ரிஷப வாகனம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது. இது போன்ற பெரிய ரிஷப வாகனம் தேவகோட்டை பகுதியில் உள்ளது.  விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் எழுந்தருளும் வாகனங்களில் மிகப்பெரியது இந்த ரிஷப வாகனம்.

ரிஷபம் சிவனின் சின்னமாகவும், தர்ம தேவதையின் வடிவமாகவும் விளங்குகிறது. ரிஷப வாகனத்தின் கால்கள் நான்கும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை குறிப்பதாகும். வேதரூபமாக ரிஷபம் கருதப்படுகிறது. இதனால் சிவனுக்கு வேதநாயகன் என்று பெயர்.

புதுப்பொலிவுடன் ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனம்

வெள்ளி ரிஷப வாகன சிறப்புகள்

திருவண்ணாமலையிலிருந்து பணி நிமித்தமாக சென்னை சென்ற பக்தர் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ரிஷப வாகனத்தை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக வந்து கொண்டிருக்கிறார். இந்த வாகன சிறப்புகள் குறித்து அவர் கூறுகையில்,

இந்த பெரிய வெள்ளி ரிஷப வாகனத்திற்கு பல சிறப்புகள் உண்டு தீபத் திருவிழாவின் முத்திரை திருவிழா என்று கூறலாம். இந்த திருவிழாவை வெறும் திருவிழாவாகவே மட்டும் பார்க்க முடியாது,    Perfect execution by a Team Work    என்பதன் மிக சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

இந்த வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். மர சப்பரம் ஆகிய கீழ் பகுதி அதற்கு மேல் பிரம்மாண்டமான ரிஷபம் சாமி அமரும் வகையில் ஒரு பீடம். இந்த சப்பர உயரமே கிட்டத்தட்ட ஐந்து அடிக்கு மேல் இருக்கும் அதற்கு மேல் உள்ள ரிஷபம் ஒரு பத்தடிக்கு இருக்கும் மேலே இருக்கும் பீடம் ஒரு அடி உயரத்தில் இருக்கும் அதற்கு மேல் அருணாச்சலேஸ்வரர் அமர வேண்டும்

அருணாச்சலேஸ்வரர் உற்சவமூர்த்தி விக்ரகமே ஒரு ஏழு அடி இருக்கும். அதற்கு மேல் பிரம்மாண்ட சுவாமி மாலைகள். அதே போன்று அன்றைக்கான பிரம்மாண்ட பிரபை இவை எல்லாவற்றிற்கும் மேலே ரிஷப வாகனத்திற்கே உரிய சிறப்பான பெரிய குடை அலங்கரிக்கும்.

ரிஷப வாகனத்தில் சுவாமி ஏற்றுவதை பலரும் பார்த்திருப்பீர்கள் அது ஒரு ஆச்சரியமான நிகழ்வு என்று கூறலாம். எந்த ஒரு பிடிமானமும் பக்கவாட்டில் இல்லாமல் நடுவில் இருக்கும் ஒரு கயிற்றை மட்டும் பற்றி கொண்டு சாய்வான மரபெட்டிகளில் நிதானமாக ஏற வேண்டும். இரண்டு தடிமனான கட்டைகளில் நேர்த்தியாக பிணைந்து வைக்கப்பட்டிருக்கும் மிக அதிக எடை கொண்ட அருணாச்சலேஸ்வரர் உற்சவமூர்த்தி ஒவ்வொரு படியாக மேலே ஏற்ற வேண்டும்.

அப்போது கீழே நின்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் சுவாமி மேலே ஏற வேண்டுமே என்ற பதட்டப்படுத்தும். தன்னை அறியாமல் அண்ணாமலைக்கு அரோகரா என்ற முழக்கமும் ஒவ்வொரு படியாக ஏறுவதற்கு இசைவாக ஒலிக்கப்படும் உடல்வாகிய சத்தம் போன்றவையே அந்த சீர் பாத தூக்கிகளுக்கு உந்துதல் ஆகும்.

இப்போதெல்லாம் பல வண்ணக் கலர்களில் டீ சர்ட் போட்டுக் கொண்டு இளைஞர் பட்டாளம் சுவாமியை ஏற்றி விடுகிறார்கள் பார்க்க மகிழ்ச்சியாக தான் உள்ளது.

சாய்வான படியில் ஏறும் சாமியை சமமான பீடத்தில் ஏற்றி விட முடியாது. அதற்காகவே  வாகனத்தின் முன்பும் சப்பரத்தின் மீதும் மரப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.

பின்புறம் உள்ள மரப்பெட்டியின் மீது நிற்பவர்கள், சாய்வாக ஏற்றப்படும் சாமி தூக்கும் கட்டைகளை ரிஷபம் மேல் உள்ள பீடத்தில் வைத்து சிறிது சிறிதாக முன்புறம் தள்ள வேண்டும். இந்த சமயத்தில் சாமி படிக்கட்டுகளில் ஏற்றி கொண்டிருப்போர் கை எட்டாத உயரத்திற்கு சாமியை தூக்கி சில நொடிகள் சாமி ஒருவித அந்தரத்தில் இருப்பது போலவே இருப்பார்.

கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மிரட்சியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும்,

வாகனத்தின் முன் நிற்போர் மரப்பெட்டி மீது நின்று கட்டைகளை முன்னே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாமியை பீடத்திற்கு கொண்டு வருவர். பீடத்தில் சரியான இடத்தில் சாமியை அமர்த்தியதும் அரோகரா சத்தமும் கைதட்டல் விசில் சத்தமும் விண்ணை பிளக்கும்.

சுவாமி பீடத்தில் அமர்ந்த பின் அலங்காரங்கள் அதாவது பெரிய மாலை பெரிய பிரபை வைக்கப்படும்.

பிறகு நடைபெறுவது தான் மிகவும் முக்கியமானதாகும். ஆம் குடை ஏற்றுவது. மழைக்காலத்தில் திருவிழா வருவதால் குடை நனையாமல் இருக்க மேலே பிளாஸ்டிக் ஷீட் போர்த்தி இருக்கும். இந்த குடையை விரிப்பது தனி அழகு தான்.

குடையை தலைகீழாக வைத்து தான் விரிக்க வேண்டும். குடைக்கம்புக்கும் குடைக்கும் இடையே ஒரு பெரிய ஆணியை பொருத்தினால் தான் குடை விரிந்த நிலையிலேயே வைக்க முடியும். இந்தப் பெரிய குடையை ஏற்றுவது சாமியேற்றுவதை விட சிரமமானது. இந்த குடை 20 அடிக்கு இருக்கும். இந்தப் பெரிய குடையை ஏற்றிய பின்பு அந்த ரிஷப வாகனத்திற்கு ஒரு கம்பீரம் வந்துவிடும்.

இப்போது சொல்லுங்கள். நான் முன்பு குறிப்பிட்ட டீம் ஒர்க் என்பது அர்த்தம் இப்போது புரியும். இந்த ரிஷப வாகனம் ஆன்மீக விஷயம் மற்றும் திருவிழா சார்ந்த விஷயம் மட்டும் அல்லாமல் கணிதமும் அறிவியலும் உள்ளன புரிந்தணர்வு ஒருங்கிணைப்பு சமயோசிதம் மற்றும் ஆர்வமும் பக்தியும் அனுபவமும் இணைந்துள்ளன வாருங்கள் இந்த அழகிய திருவிழாவை கண்டு களியுங்கள் என கூறினார்.

இது போன்ற சிறப்புகள் வாய்ந்த பிரம்மாண்டமான ரிஷப வாகனத்தில் வேதநாயகனாக அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் இன்று இரவு 9 மணிக்கு மேல் எழுந்தருளுகிறார்.

தகவல் உதவி

பாரத ஸ்டேட் வங்கி ஓய்வு பெற்ற அதிகாரி நாராயணன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top