கார்த்திகை மாதம் பிறந்தாலே சோளிங்கர் ஊர் களைகட்டி விடும். குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நரசிம்மரை தரிசிக்க வருகை தருவார்கள் .
மலைக்கோவிலுக்கு செல்ல தக்கான் குளம் வழியாக ஒரு பாதையும் பானாவரம் சாலையில் இருந்து கொண்டபாளையம் வழியாக ஒரு பாதையும் உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு பாதைகளிலும் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ. 10 வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இந்த வாகன வசூல் உள்ளூர் வாசிகளிடமும் வசூலிக்கப்படுவதால் உள்ளூர்வாசிகள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குறிப்பாக பைக்கில் வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லோக்கல் தான் என்று கூறினாலும் கொண்டபாளையம் பகுதியில் வசிப்பவர்கள் தான் லோக்கல் என்று கூறி, சோளிங்கரை அடுத்துள்ள பகுதிகளான புலிவலம், போடப்பாறை, பாண்டியநல்லூர் பகுதியை சேர்ந்தவர்களிடம் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தாலும் பரவாயில்லை, பைக்கில் வருபவர்களிடம் அதுவும் சோளிங்கரை சேர்ந்தவர்களிடம் வசூல் செய்கிறார்கள்.
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் பைக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் கிராம சாலையில் கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்?
இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பு




