Close
ஏப்ரல் 24, 2026 2:12 காலை

பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலி: அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

புதிய கைபேசி செயலி, அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் நியாய விலை கடைகளுக்கு விற்பனை இயந்திரங்கள், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நாடளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய தகவலியல் மையம் ஏற்பாடு செய்துள்ள “கார்த்திகை தீபம் 2025” என்ற புதிய கைபேசி செயலி உருவாக்கப்பட்டு பொதுப்பணித்துறை அமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த செயலியில் பக்தர்கள் எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக பொது தகவல்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள், மருத்துவ முகாம்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்,காவல் சேவை மையங்கள், கழிவறைகள், அவசர உதவி 108 ஆம்புலன்ஸ், அவசர மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இருக்குமிடங்கள் குறித்தும், அவசர தேவைக்கான கட்டுபாட்டு உ தவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், திருக்கோயில் பற்றிய விவரங்கள் ஆகியவைகளை இந்தசெயலில் அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் தீபம் நகர், ஈச்சங்குப்பம், தென்னரசம்பட்டு , சாணார்பாளையம், ந.பெ. தேவனந்தல், கேட்டாங்கல், புனல்காடு, வேங்கிக்கால் புதூர், அழகானந்தல் 2, காமராஜ் நகர் ஆகிய 10 நியாய விலைக்கடைகளுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரங்களை விற்பனையாளர்களிடம் வழங்கினார்.

மேலும் 22 பழங்குடியின மக்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது மற்றும் சத்துணவு பிரிவில் 8 வாரிசுதாரர்களுக்கு கருணைஅடிப்படையில் பணிநியமன ஆணைகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக 5 நபர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்குகான பணி நியமன ஆணைகளையும், தமிழ்நாடு தேர்வாணயம் சார்பில் 1 நபருக்கு சாலை ஆய்வாளர்க்கான பணி நியமன ஆணையினையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 3 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை வட்டம் அத்தியந்தல் பகுதியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அடிஅண்ணாமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்து புதிதாக உருவாக்கப்பட்டதிற்கான ஆணையை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் டாக்டர்.ஆர்.மணி, வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top