Close
மார்ச் 7, 2026 1:00 மணி

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ் சொற்பொழிவு

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-25 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, கணித்தமிழ் சார்ந்து தொடர் சொற்பொழிவுகள் மாதந்தோறும் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழ் இணையக் கல்விக்கழகம் மாதந்தோறும் துறைசார்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு கணித்தமிழ் தொடர்பான சொற்பொழிவுகளைக் கல்லூரிகளில் நடத்தி, அதனை அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயனடையும் வண்ணம் YouTube வழியே நேரலையில் ஒளிபரப்பு செய்துவருகிறது.

முதல் கணித்தமிழ் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தலைமையில், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முனைவர் மதன் கார்க்கி செயற்கை நுண்ணறிவும் கலைகளும் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

தமிழ் இணையக் கல்விக்கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தும் ஏழாவது கணித்தமிழ் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன் (மொழித் தொழில்நுட்ப வல்லுநர்) ”தமிழ்ப் பெருமொழி மாதிரிகள் – வாய்ப்புகளும் சவால்களும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் கோமகன் நிகழ்ச்சியின் நோக்கவுரை வழங்கினார்.

தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அசோக்குமார் வரவேற்புரையும், புலத்தலைவர் முனைவர் பாலாஜி நன்றியுரையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் , தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல், மின்னணுவியல் உள்ளிட்ட பல்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top