Close
மார்ச் 7, 2026 12:09 மணி

கார் கண்ணாடியை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12,000 ரொக்கம் திருட்டு

நாமக்கல்லில், திருமணத்திற்கு வந்த இன்ஜினியர் காரில் வைத்திருந்த, 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 12,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஹரிஸ்குமார் (28). இவர், ஆஸ்திரேலியாவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி ஹர்சினியுடன், நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு காரில் வந்துள்ளார்.

இங்குள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் அவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார். பின்னர் இரவில், அவர் தனது காரில் குடும்பத்தாருடன் திருமண மண்டபத்திற்கு சென்றார். அப்போது, தங்க நகை வைக்கப்பட்டிருந்த பையை காருக்குள் வைத்துவிட்டு, காரை திருமண மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, காரின் இடதுபக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே பையில் வைத்திருந்த ஆரம், வளையல் என மொத்தம் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 12,000 ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், தனது காரின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த குகன் என்பவரது காரின் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து, ஹரிஸ்குமார் நாமக்கல், நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் கண்ணாடியை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top