தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி, எருமப்பட்டி, எம். மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் இலங்கை தமிழர்கள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில், 700 குடும்பங்களைச் சேர்ந்த, 2.500க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் இலங்கையில் இருந்து, 2015, ஜனவரி 9க்கு முன், உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் பதிவு செய்து சட்டபூர்வமாக தங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 103 முகாம்களில் சுமார் 58,000 பேர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு, கடந்த, செப்டம்பர் 2ல், குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், தண்டனையிலிருந்து இலங்கை தமிழர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, நாமக்கல் தலைமை தபால் ஆபீசில் அலுவலகத்தில் இருந்து, 370 கடிதங்களை அனுப்பினர்.
இது குறித்து, பரமத்தி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த வினோதன் கூறியதாவது: 1954 முதல், 2015 ஜனவரி 9-க்கு முன், இலங்கையில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக தமிழகம் வந்தனர். அவர்கள், தமிழகத்தில் உள்ள, 103 முகாம்களில் 58,000 பேர் தங்கி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 2,500 பேர் வசித்து வருகிறோம். மத்திய அரசு கடந்த செப்டம்பரில், வெளியிட்ட அரசு உத்தரவில், இலங்கையில் இருந்து, 2015க்கு முன் திரும்பி இந்தியா திரும்பி, முறையாக இந்திய அரசிடம் பதிவு செய்து வசித்து வருபவர்களுக்கு, குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதாக கூறியுள்ளதை வரவேற்கிறோம்.
அதேநேரத்தில், எங்களை சட்ட விரோத குடியேறிகளாக வகைப்படுத்தியுள்ள இந்திய அரசு, எங்களுக்கு சட்டபூர்வமான குடியுரிமை வழங்கி, இந்திய குடியுரிமை பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.




