நாமக்கல்லில் ஓட்டலில் புகுந்து, ரூ. 1.90 லட்சம் கெள்ளை அடித்துச்சென்ற சம்பவத்தில், நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (49). அவர், நாமக்கல் நகரில், பரமத்தி ரோட்டில் ஓட்டல் மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த, செப். 29ல், வழக்கம்போல் ஓட்டலில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கடையில் 3 நாட்களாக வியாபாரம் செய்த வகையில் வந்த ரூ. 2.70 லட்சம் ரொக்கப்பணத்தை, 2 லெதர் பேக்கில் வைத்து, அலுவலக டேபிள் டிராயரில் வைத்துப் பூட்டி விட்டு, இரவு 11 மணிக்கு, வீட்டுக்குச் சென்று விட்டார்.
மறுநாள், அதிகாலை 5:40 மணிக்கு, கடை மேனேஜர் செல்வம், உரிமையாளர் யோகேஸ்வரனை தொடர்பு கொண்டு, சமையலறையின் பின்பக்கம் பணம் சிதறி கிடப்பதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து, அவர் கடைக்கு வந்து பார்த்தபோது, 2 லெதர் பேக்கில், ரூ. 80,000 மட்டும் இருந்துள்ளது. மீதி பணம் ரூ. 1.90 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கடையில் பொருத்தப்பட்டிருந்த ‘சிசிடிவி’ கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது, மர்ம நபர் அலுவலக டேபிளை உடைத்து, அதில் இருந்த லெதர் பேக்குகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, யோகேஸ்வரன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை கொள்ளையøடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில், பணத்தை திருடியது நெல்லை மாவட்டம், நாங்குநேரி, வண்டிக்காரத்தெருவை சேர்ந்த காளியப்பன் (38) என்பதும், பழைய குற்றவாளியான அவர் வேறு ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அவரை, கோர்ட்டில் வாரண்ட் பெற்று கடந்த 19ம் தேதி, நாமக்கல் காவல்துறையினர் கஸ்டடி எடுத்து விசாரணை செய்தனர். அப்போது அவர் நாமக்கல் ஓட்டலில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரது தகவலின் பேரில், திருடப்பட்ட பணம் ரூ. 1.90 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் காளியப்பன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.




