நாமக்கல் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அடிக்கடி பாம்புகள் படையெடுப்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது ஒரு பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, அழகு நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. 1 முதல், 5ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில், 70 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், தற்போது, கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
பள்ளிக்கு பின்புறம், 2 அரசு கல்லூரி விடுதிகள் அமைந்துள்ளது. இதற்கு இடையில் உள்ள காலி நிலத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் படர்ந்துள்ளது. இந்த பகுதியில், மழைநீர், கழிவுநீர் தேங்குவதால், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாட்டம் காணப்படுகிறது.
இவை, அவ்வப்போது, அரசு பள்ளிக்குள் படையெடுத்து வருகிறது. அதைக்கண்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பயந்து அலறுகின்றனர். அதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். அவர்களை ஆசிரியர்கள் அவ்வபோது சமாதானம் செய்து, பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருந்தும், தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வரும் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தினம் தினம் தள்ளப்படுகின்றனர். மேலும், கழிவுநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு அடைவதுடன், போர்வெல் தண்ணீரும் மாசுபட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு பாம்பு மீண்டும் பள்ளிக்குள் புகுந்தது. அதைக்கண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் அலறியடித்து ஓடினர்.
அரசு பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி இடிந்த நிலையில் உள்ள காம்பவுண்ட் சுவரை கட்டிக்கொடுத்து, பள்ளி வளாகத்தில் பாம்புகள் வராமல் தடுத்து, இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு கண்டு, பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், ஏராளமான பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து முற்றுகையிட்டனர்.
தகவல் கிடைத்ததும், அங்கு வந்த வட்டார கல்வி அலுவலர் புஷ்பராஜ், மாநகராட்சி கவுன்சிலர் இளம்பரிதி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அந்த நேரத்தில், திடீரென ஒரு பாம்பு பள்ளி கம்பவுண்ட் சுவர் அருகே வந்தது. அதைபார்த்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் பெற்றோர்கள், பள்ளிக் கல்வித்துறையினர் முறையிட்டனர். அப்போது, பள்ளிக்கு பின்புறம் உள்ள புதர் மண்டிய இடத்தை சுத்தம் செய்து தருவதுடன், கழிவுநீர் தேங்காத வகையில், 200 மீ., அளவிற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.




