புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில், வாசகர் பேரவையின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, புதுக்கோட்டை, திருவப்பூர், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மருத்துவர் ச.ராம்தாஸ், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருத்தினர்களாகக் கலந்து கொண்டு நூல்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
கவிஞர் தங்கம் மூர்த்தி தனது உரையில், திருக்குறள் ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட பலவேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. சமீபத்தில் 3 அரசுப்பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு பெரும் தொகையை பரிசாகப் பெற்றனர். இதன் மூலம் அறத்தை மட்டுமல்ல செல்வத்தையும் தரவல்லது குறள் என்பதை அறியலாம்.
நீங்களும் திருக்குறளைப் பயின்று வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொருவரும், உங்கள், தாய், தந்தை, குருவை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அது உங்கள் வாழ்வை வளப்படுத்தும் என்றார்.
முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செ.முத்துலெட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். வாசகர் பேரவைச் செயலர் சா. விஸ்வநாதன் அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் த. ராசு, ஆசிரியர்கள் ஸ்ரீ மலையப்பன், சிவராஜா, பிரவீன்குமார், வியாஸ், ராஜா, பழனியம்மாள் ஸ்வர்ணலதா ஆகியோர் பங்கேற்றனர்.




