Close
மார்ச் 7, 2026 1:40 மணி

மறு சீரமைக்கப்பட்ட அண்ணா சிலையை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் மறுசீரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மறுசீரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

திருவண்ணாமலையில் 3 முதல்வர்கள் அடங்கிய இந்த சிலை திறப்பு விழாவானது கடந்த 1969ம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞரால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவுக்கு சிறுசேமிப்பு திட்ட துணைத் தலைவராகவும், பரங்கிமலை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த எம்ஜிஆர் தலைமை தாங்கினார். அமைச்சராக இருந்த ப.உ.ச முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த அண்ணாவின் சிலையை, ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர், இருமொழி கொள்கையை நாட்டுக்கு பறைசாற்றியவர். திராவிட இயக்கத்துக்கு மூலகர்த்தா அவர்தான். எனவே, திராவிட மாடல் ஆட்சியில் அண்ணா சிலையை மறு சீரமைப்பு செய்து திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.,

இந்த சிலையானது முழுமையாக மறு சீரமைக்கப்பட்டு ஏற்கனவே அதில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் உள்ள பெயர்கள் ஒன்று கூட மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அப்படியே இடம்பெறவைத்து பொதுப்பணித்துறை சார்பில் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் அதோடு மட்டுமில்லாமல் அண்ணா சிலை நிறுவ நிதி உதவி வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார்.

விழாவில், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், வேளாண் துறை இயக்குநர் முருகேஷ், மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்திவேல்மாறன், எஸ்.பன்னீர்செல்வம், பிரியாவிஜயரங்கன், துரைவெங்கட், துணை மேயர் சு.ராஜாங்கம், குட்டி புகழேந்தி, எஸ்.விஜயராஜ், டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், எஸ்.கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top