Close
மார்ச் 7, 2026 1:28 மணி

வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாக அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை  நடந்தது.

அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 91 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, மாநில இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ மற்றும் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான எ.வ.வேலு வரவேற்றார்.

வெள்ளி சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்த முதல்வர் இளைஞர்கள் ஆரவாரம்

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கால் மேல் கால் போட்டு  ஸ்டைலாக அமர்ந்தார் .

இந்த காட்சியை பார்த்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மகிழ்ச்சியில் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதேபோல் திமுக இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசை முதல்வருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வாள், கேடயத்தை நினைவு பரிசாக அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

விரிவாக செய்யப்பட்டிருந்த கூட்ட ஏற்பாடுகள்

திருவண்ணாமலையில் நேற்று நடந்த வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 13 மாவட்டங்களை சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் வெள்ளை நிற சீருடையுடன் கலந்து கொண்டனர். அதற்காக, திருவண்ணாமலை கலைஞர் திடலில் 150 ஏக்கர் பரப்பளவில் கூட்ட ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்துக்கு காவல் துறை விதித்த 17 கட்டுப்பாடுகள் முறையாக நிறைவேற்றப்பட்டு, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, மின்துறை, உணவு பாதுகாப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளிடம் தடையின்மை சான்று பெற்று நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்களுக்கு உதவி செய்ய 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், 500 தற்காலிக கழிப்பறைகள், 150 டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் 2 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

திருவண்ணாமலை நகரில் பொதுமக்களுக்கு எந்தவித போக்குவரத்து நெரிசலும், பிரச்னையும் ஏற்பட கூடாது என்பதற்காக, நகருக்கு வெளியே 5 கி.மீ. தொலைவில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடந்த கலைஞர் திடலில் இருந்து பிரதான சாலைகளை இணைக்கும் வகையில் வாணியந்தாங்கல், மலப்பாம்பாடி, வள்ளிவாகை ஆகிய 3 வழித்தடங்கள் இருவழி சாலைகளாக சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top