காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் நடைபெறுவது கள ஆய்வில் தெரிய வந்தது தொடர்ந்து, அதனை தடை செய்ய கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் ஓம் நமோ லட்சுமி நாராயணா என்ற பெயரில் தண்ணீர் கேன் உற்பத்தி தொழிற்சாலை கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது.
அதிக அளவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சுவதாகவும் இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் ஆதாரம் குறைந்து வருவதாக கூறி அதன் மீது ஆய்வு நடத்த கோரி மனு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொண்டதில் தொழிற்சாலையில் மாநகராட்சியின் தொழில் உரிமம் மற்றும் சுகாதார சான்றிதழ் பெறாமல் நீண்ட வருடங்களாக தொழில் நடத்தி வருவது ஆய்வில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் உடனடியாக தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து அதனை மூடி பொதுமக்களின் நீர் ஆதாரத்தை பாதுகாக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகளவில் ஆழ்துளை கிணறு அமைத்து நீர் உறிஞ்சியதால் தற்போது பொதுக் குழாயில் கூட தண்ணீர் வருவதில்லை என தெரிவித்தனர்.




