திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ, கடனுதவி, புதிய நீா்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 610 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செய்யார்
மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த 65 மனுக்களும்,
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 64 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.




