மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என மாநிலங்களவையில் திமுக ராஜ்யசபா எம்பி. நாமக்கல் ராஜேஷ்குமார் பேசினார்.
டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில், திமுக எம்.பி., நாமக்கல் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள MGNREGSA என்ற ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சட்டப்பூர்வமாக வேலை கோரும் உரிமை கொண்ட திட்டமாகும். ஆனால் மத்திய அரசின் புதிய விபிஜி ராம்ஜி மசோதா மத்திய அரசு, மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவது நிபந்தனை உட்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.
கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய விவசாய தொழிலாளர்களின் வேலை கோரும் உரிமையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவில் அறுவடை காலம், விதைப்பு காலம் என்று கணக்கிட்டு அந்த நாட்களில் வேலை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பார்லியில் குறிப்பிடும்போது 125 நாட்கள் வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் என்று கூறுகிறார்.
விஞ்ஞானபூர்வமாக கிராமப்புறதில் உள்ள ஏழை விவசாய கூலி தொழிலாளர்களை ஏமாற்றும் வகையில் இது அமைந்துள்ளது. விதைப்பு மற்றும் அறுவடை காலத்தை கணக்கிட்டு ஆண்டிற்கு 60 நாட்கள் வேலை இல்லை என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த போது 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதியளிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து படிப்படியாக இந்த திட்டத்தில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 100 நாட்கள் என்பதை 50 மற்றும் 60 நாட்களாக குறைக்கப்பட்டது. இப்போது முழுமையாக இந்த சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில், இந்த திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் மனித வேலை நாட்களாக இருந்தது. தற்போது அது 20 லட்சம் மனித வேலை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உரிய காலத்தில் வழங்குவதில்லை.
இப்பொழுது உள்ள சட்டத்தின்படி ஒரு கிராமத்தில் எவ்வளவு வேலை நாட்கள் வேண்டும் என்பதை கிராம சபை முடிவு செய்யும். ஆனால் இந்த புதிய மசோதாவில் கிராமத்திற்கு எவ்வளவு வேலை நாட்கள் வழங்கப்படம் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும்.இது கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிக்கிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை கைவிடப் பார்க்கிறது. இந்த புதிய மசோதாவை கைவிட வேண்டும் என தமிழக முதல்வர், பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று, ஏழை எளிய கிராமப்புற மக்களின் நலன் கருதி மத்திய அரசு இந்த மசோதாதவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துப் பேசினார்.




