ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என நாமக் விவசாயிகள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாம் இயக்கம் (தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்) சார்பில், மாவட்ட ஆலோசனை கூட்டம், நாமக்கல் அடுத்த கீரம்பூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். பொறுப்பாளர் குப்புசாமி வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கதிர்வேல், மண்டல செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் இயக்கம் மாநில தலைவர் பிரபுராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் ரேஷன் கடையில், மாதம் தோறும் வழங்கும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதில், 2 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கவேண்டும்,
மேலும், மாதம் தோறும் 5 கிலோ தேங்காயும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், 10 கிலோ தேங்காயும் அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பாட்டில் இருக்கும் வரை, கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும். சத்தான நீரா பானத்தை அரசு விழாக்களில் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள, 10 கோடி பனை, தென்னை மரங்களில் மரம் ஏற ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால், தமிழக இளைஞர்களுக்கு, தென்னை மற்றும் பனை மரம் ஏற ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கி, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ. 5,000 வீதம் வழங்க வேண்டும். கரும்பின் உப பொருட்களான மொலாசஸ், பகாஸ், எரி சாராயம் மற்றும் மின்சாரம் போன்றவற்றிற்கு சர்க்கரை ஆலைக்கு கிடைக்கும் லாபத்தில் பங்குத்தொகை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
கால்நடை தீவனங்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 55, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 75 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
மேட்டூர் அணை உபரிநீரை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளிலும், பம்பிங் முறையில் நீர் நிரப்ப, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




