திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். இதையொட்டி, திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் மாநகராட்சி பள்ளி எதிரில் வேளாண் சங்கமம் கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கப்படுகிறது.
அதேபோல், பல்வேறு அரசுத்துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் விழா திருவண்ணாமலை மாநகராட்சி மலப்பாம்பாடி பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற டிச.27ம் தேதி தமிழக முதல்வா் ஸ்டாலின் வருகை தருகிறாா். இதையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட மலப்பாம்பாடி பகுதியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கென பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெற உள்ளனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரங்கத்தில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம்கள் விரிவாக திட்டமிடப்பட்டுள்ளன. அதோடு, பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்படுகிறது. மேலும், விழா நடைபெறும் பகுதிக்கு எளிதில் வந்து செல்ல வசதியாக மூன்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, துறை சாா்ந்த அலுவலா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.
விழாவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், விழா முன்னேற்பாடுகளை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், பணிகளை விரைந்து முடிப்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றார்.
ஆய்வின்போது இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.




