கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கேக் வழங்கி யேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடினர்,
மேலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாமக்கல் துறையூர் ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் 24ம் தேதி நள்ளிரவில் பங்கு தந்தை தாமஸ் மாணிக்கம் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி முதல் 5 கட்டமாக கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையொட்டி தேவாலயத்தின் முன்பு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டதோடு, கிறிஸ்து அரசர் ஆலயம் பல வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த குடில் முன்பு திரளான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தை இயேசுயை வணங்கி சென்றனர்.




