Close
மார்ச் 7, 2026 2:51 மணி

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளை கண்காணிக்க அதிவிரைவுப் படைகள் அமைப்பு

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை - கோப்புப்படம்

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பரமரிப்புத் துறை சார்பில் 45 அதிவிரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சுமார் 8 கிராமங்களில் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட இடங்களில் 1 கி.மீ., சுற்றளவில் கோழிகள் வாத்துகள் உட்பட அனைத்து வீட்டுப் பறவைகளையும் அழிப்பதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் 10 கி.மீ சுற்றளவிற்கு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள வாத்துகள், கோழிகள், முட்டைகள், காடை மற்றும் பிற பறவைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு, பயோ செக்யூரிட்டி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்கள் மற்றும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

மேலும் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்க கால்நடை பராமரிப்பத்துறை மூலம் 45 அதிவிரைப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிவிரைவுப் படையிலும் கால்நடை உதவி மருத்துவர், உதவி ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அதிவிரைவுப் படையினர் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்வர். ஆய்வின்போது பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்வது, இறந்த கோழிகளை நோய் பரிசோதனை செய்வது உள்ளிட்டவை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top