Close
மார்ச் 7, 2026 12:09 மணி

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்கவேண்டும்: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நாமக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு, துணை மேயர் பூபதி பதில் அளித்துப் பேசினார். அருகில் மேயர் கலாநிதி.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்திப் பேசினர்.

நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டம், மேயர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தி பேசினர்.

கிருஷ்ணமூர்த்தி (5வது வார்டு கவுன்சிலர்): எனது வார்டு பகுதியில் தெருநாய்கள் அதிகளவு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் நிறைவடைந்தபோதும், ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

சரவணன் (16-வது வார்டு), ஈஸ்வரன் (38வது வார்டு): மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

நந்தகுமார் (9-வது வார்டு): நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், ரங்கநாதர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. எனினும், கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை.வரும் ஆண்டுகளில் விழா நடைபெறும் சமயங்களில் பக்தர்கள் நலன் கருதி குறைகளை களைய இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளம்பரிதி (34-வது வார்டு): எனது வார்டில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. மின் விளக்குகளை பொறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் டயர் வெடித்துவிட்டதாக கூறி, பல நாட்கள் எனது வார்டுக்குள் வாகனங்கள் வருவதில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் மற்றும் துணை மேயர் உறுதியளித்தனர். தொடர்ந்து மாநகராட்சியில் கொண்டுவரப்பட்ட 162 தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top