Close
மார்ச் 7, 2026 1:27 மணி

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க வேண்டும்: இணைப்பதிவாளர் அறிவுறுத்தல்

நாமக்கல்லில் நடைபெற்ற, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அருளரசு பேசினார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு, வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன்களை விநியோகிக்க வேண்டும் என, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான மாதந்தாந்திர ஆய்வுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக அரசின், பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக ரேஷன் கார்டுகள் தெருவாரியாக பிரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு, டோக்கன்களை ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, விற்பனையாளர்கள் நேரில் சென்று வழங்க வேண்டும்.

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை ஜன. மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 100 சதவீதம், அனைத்து பயனாளிகளுக்கும் வீடுகளுக்கு சென்று பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் அறிவழகன், பொதுவிநியோக திட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள் சிவக்குமார், நிர்மலா, தியாகராஜன் மற்றும் ரேஷன் கடைபணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top