Close
மார்ச் 7, 2026 6:04 மணி

திருவண்ணாமலை மார்கழி மாத பௌர்ணமி: பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்

ஆருத்ரா தரிசனம் நடராசர் அலங்காரம்

மார்கழி மாத பௌர்ணமி தினமான நேற்றிரவு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை  மாலை முதல் இன்று சனிக்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

இந்தநிலையில், மார்கழி மாத பௌர்ணமி மாலை 06.11 மணியளவில் தொடங்கி, மறுநாள் 03.01.2026 சனிக் கிழமை மாலை 04.07 முடிவடைகிறது.

இதையடுத்து, தொடர் விடுமுறையின் காரணமாக வியாழக்கிழமை முதலே ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வரத்தொடங்கினா். வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

விடிய, விடிய பல லட்சம் பக்தர்களின் கிரிவலம் தொடர்ந்தது. ஓம் நமசிவாய என ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பௌர்ணமியையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, நேற்று மாலை 4 மணி முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

இன்று ஆருத்ரா தரிசனம் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும் அதனால் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

சிறப்புப் பேருந்துகள்..

கிரிவல பக்தா்கள் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், புதுவை, தெலங்கானா மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்தப் பேருந்துகள் நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசன உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, இதில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்; இந்த விழா, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் குறிக்கும் முக்கிய சைவ விழாவாகும்.

இதற்காக நடராஜர் இன்று அதிகாலை 3 மணிக்கு ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கண்டு அருள்பாலிப்பார், பின்னர் கார்த்திகை தீப மை பிரசாதமாக வழங்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top