கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின், மானிய கேரிக்கையின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் 9 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்குவதற்கான அரசு உத்தரவு வெளியிடப்படவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கு உண்டான கரும்பு அரவை பருவம் தொடங்கியுள்ளது.
கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் மூலம், பழைய கிரைய தொகையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் உடனடியாக வழங்கக்கோரி, வருகிற 10ம் தேதி காலை 11.00 மணிக்கு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




