Close
மார்ச் 7, 2026 4:26 மணி

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரேவதி வரவேற்றார்.

விழாவில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

முதலமைச்சரின் ஆணைப்படி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை அரசு கலைக் கல்லூரியில் மடிக்கணினி வழங்குகிற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது உலகம் உங்கள் கையில் என்ற பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கனி வழங்கப்பட உள்ளது முதல் கட்டமாக தற்போது 10 லட்சம் மடிக்கணிகள் அரசின் சார்பாக உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 கல்லூரிகளை சேர்ந்த 5916 மாணவ- மாணவிகளுக்கு இன்றைக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. மருத்துவமும், கல்வியும் என்னுடைய இரண்டு கண்கள் என முதல்வர் அடிக்கடி குறிப்பிடுவார். அதற்காக, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

தமிழர்களின் வரலாறு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கீழடி மற்றும் பொருனை தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மனிதனுக்கு இணையான சக்தி எதுவும் இல்லை என்பது தான் உலகத்தின் சான்று. தற்போது, டிஜிட்டல் உலகம் வந்துவிட்டது. கைபேசியில் எல்லாம் அடங்கி இருக்கிறது. உலகத்தையே நம்முடைய கைபேசியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. கணினி உலகம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும், தகவல் பரிமாற்றங்கள் எளிதாக நடைபெற வேண்டும். அதற்கு, மடிக்கணினி அவசியமானது.

அதனால், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை முதல்வர் வழங்கி இருக்கிறார். குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நிறைவேற்றுகிறார். புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்கள் தங்களுடைய இலக்கை அடைய உதவியாக இருக்கிறது.

நாட்டு நடப்புகளை, நாளை உலகத்தை புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு உங்கள் சேவை அமைந்திட வேண்டும் என அமைச்சர் பேசினார்..

அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி, செங்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், செய்யாறு அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஜமுனாமரத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், திருவண்ணாமலை அரசு  தொழிற்பயிற்சி நிலையம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி,

தஞ்சூர் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி, நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழ்பென்னாத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகிய அரசு கல்லூரிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் இளங்கலை மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக 5102 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாநில மருத்துவ துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா ஸ்ரீதரன், கார்த்திவேல்மாறன் பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், துணை மேயர் ராஜாங்கம் மற்றும் கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரி துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top