Close
மார்ச் 7, 2026 1:28 மணி

தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு.

தமிழக அரசு, ஏற்கனவே அறிவித்த வாக்குறுதியின்படி, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று தொடர்ந்து பேசி வரும், தமிழக முதல்வர், 2021ல், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அளித்த வாக்குறுதி மற்றும் தேர்தல் கால வாக்குறுதியின்படி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என்று சொன்னதை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள, 99 சதவீதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறுதியான, வலுவான கோரிக்கையாக உள்ளது. அதனால், தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், தமிழக அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், 10 சதவீதம் பங்களிப்பு நிதியை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, வட்டியுடன் மொத்தமாக வழங்க வேண்டும். இது, தமிழகம் முழுவதும் உள்ள, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முதன்மையான, முக்கியமான கோரிக்கையாக உள்ளது. இவற்றை, தற்போது வெளிவர உள்ள,தமிழக அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அரசு உத்தரவில் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள, தமிழக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், இணைய விருப்பம் இல்லாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடைமுறையில் இருந்து வரும், தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படையில் தொடர்வதற்கு உரிய வழிவகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top