கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்ததில் பெண்மணியொருவர் உயிரிழந்தார்.
தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம் .
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமான தீர்த்தவாரிகள் நடைபெறும். தை மாதம் மட்டும் முதல்நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரியும், பெளர்ணமி நாளில் ஈசானிய குளத்தில் தீர்த்தவாரியும், மேலும் ஒரு தீர்த்தவாரியாக தை மாதம் 5ம் தேதி தென்பண்ணை ஆற்றிலும், அமாவாசை ஏழாவது நாள் ரதசப்தமியில் செய்யாற்றிலும் தீர்த்தவாரி நடைபெறும்.
சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் புனித நதிகளான கங்கை, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை போன்ற நதிகள் தட்சிண பினாகினி என்று சொல்லப்படும் தென்பண்ணை ஆற்றில் கலப்பதாக ஐதீகம்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாவது நாள் அண்ணாமலையார் அம்பாளுடன் அண்ணாமலையார் கோவிலின் தெற்கு திசையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை வழியாக ஓடும் தென்பண்ணை ஆற்றில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளுடன் செல்வார்.
அதன்படி நேற்று தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேலும் கீழையூர் வீரட்டானேஸ்வரர், ஏரிக்கரை மூல இரட்டை விநாயகர், அரகண்டநல்லூர் நாகேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் எழுந்தருளினர்.
மனம் பூண்டி கிராம பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் விக்னேஷ்வர் பூஜை, கலச பூஜை, பஞ்ச சாசன பூஜை, விசேஷ திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா அபிஷேகம் நடைபெற்றது .அப்போது பக்தர்கள் அனைவரும் சிவபுராணம். நமச்சிவாய மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆற்றுதிருவிழாவில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது. இத் திருவிழாவை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
வெடி விபத்து
திருக்கோவிலூர் மணலூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட சுவாமிகள் ஆற்று திருவிழாவில் கலந்து கொள்ளும். மாலை 5 மணி அளவில் தீர்த்தவாரி முடிந்து பொது மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்படும் நிலையில் ஆற்றுப் பகுதியில் உள்ள தற்காலிக பலூன் கடையில் திடீரென பலூன் நிரப்பப்படும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
பலூன் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மணலூர்பேட்டை ஆற்று ஹீலியம் கேஸ் சிலிண்டர் பலூன் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த கேஸ் சிலிண்டர் ஆனது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் 13 நபர்கள் தற்போது வரை திருவண்ணாமலை மருத்துவ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கலா எனும் பெண் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இதுபோன்ற சிலிண்டர்களுக்கு உரிமம் உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே அது குறித்து தெரியவரும் என்றார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், எ.வ.வே.கம்பன், ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.





