Close
மார்ச் 7, 2026 2:53 மணி

திருவண்ணாமலையில் குடியரசு தின விழா : தேசியக்கொடியை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர்..!

தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்

77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்தியத் திருநாட்டின் 77 வது குடியரசு தினவிழா  நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இக்குடியரசு தின விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னா், திறந்தவெளி வாகனத்தில் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆகியோா் காவல் துறையினரின் அணிவகுப்பை பாா்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டு, தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மேலும், இவ்விழாவில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

தேசப்பற்றை விளக்கும் வகையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நலத்திட்ட உதவிகள்:

இதைத் தொடா்ந்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,  வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, பழங்குடியினா் நலத்துறை,  மாவட்ட தொழில் மையம்,  மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை,  மகளிா் திட்டம்,  கூட்டுறவுத் துறை,  தாட்கோ,  தொழிலாளா் நலத்துறை,உள்ளிட்ட துறைகளின் சார்பிலும்,

மேலும்  சமூக நலத்துறை, சாா்பில் விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் 53 பேருக்கு நிதியுதவியும், 71 பேருக்கு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவியும், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு நிதியுதவியும் என மொத்தம் 2,143 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலா் சுதாகா், திட்ட இயக்குநா் மணி, செய்யாறு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் சிவா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top