நாமக்கல் நகரில் இன்று 27ம் தேதி அதிகாலை, லாரியுடன் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பிக்அப் சரக்கு வாகனம் ஒன்று சாக்கு மூட்டை பாரம் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.
இன்று அதிகாலை 6 மணியளவில், நாமக்கல் நகரில் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது, மேம்பாலத்தின் ஒரு பக்கத்தில் டூ வீலரில் வந்த 3 பேர் மீது சரக்கு வாகனங்கள் மோதியதால், டூ வீலரில் வந்த நாமக்கல் இந்திரா ஜெய்நகரைச் சேர்ந்த கார்த்திக், இந்திரா நகரைச் சேர்ந்த சேனாதிபதி ஆகிய 2 பேரும், கார்நாடகாவைச் சேர்ந்த பிக் அப் சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் உசேன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரி டிரைவர் மற்றும் டூ வீலரில் வந்த ஒருவர் என 2 பேர் பலத்த காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, ஏடிஎஸ்பி விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேம்பாலத்தில் வானகங்கள் மோதிக்கொண்டதால், சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிரேன் உதவியுடன் சரக்கு வாகனங்கள் அகற்றப்பட்டன. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




