அ.தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும், வீரர்களுக்கும், காளைகளுக்கும் அரசு சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்படும் எனவும், அ.தி.மு.க, பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான இ.பி.எஸ். தெரிவித்தார்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலப்பாளையத்தில், அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர், ப.வேலூர் எம்எல்ஏ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான இ.பி.எஸ்., ஜல்லிகட்டு போட்டியை துவக்கி வைத்து பேசியதாவது; ஜல்லிகட்டு விளையாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. இளைஞர்கள் காளைகளை அடக்கி தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்ற அற்புதமான ஜல்லிக்கட்டு போட்டி நமது கலாச்சாரத்தின் அடையாளம்.
அடுத்து தமிகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் ஈடுபடுகின்ற வீரர்கள், காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தால், அரசின் சார்பில் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.
அதேபோல், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்கின்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் அரசு மூலம் காப்பீடுசெய்து கொடுக்கப்படும் என்று கூறினார்
ஜல்லிக்கட்டுப்போட்டியில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 800 காளைகள் கலந்துகொண்டன. அவற்றுடன் 400 காளையர்கள் மல்லுக்கட்டி அடக்கி பரிசுகளை வென்றனர். அடக்க முடியாத காளைகளில் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.




