பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் சத்தியபானு, மாவட்ட துணைத்தலைவர்கள் அருள், சேதுராமன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் விஜயசரஸ்வதி, மாவட்ட மகளிரணி தலைவர் திவ்யா, மத்திய அரசு நலத்திட்டப்பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்டதலைவர் சதீஷ், துணைத்தலைவர் கனகராஜ், பாஜக பிரமுகர்கள் காளியப்பன், அருள் மற்றும் திரளான விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையம் அருகில் உள்ள, பிள்ளநல்லூர் பேரூராட்சியில் ஏரி உள்ளது. அப்பகுதியில் நடைபெறும் நெடுஞ்சாலைப்பணிக்காக, ஏரியில் கிராவல் மண் வெட்டி எடுக்க, 2 தனியார் கான்ட்ராக்டர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிøலையில் நெடுஞ்சாலைப் பணிகள் முடிவுற்ற பிறகும், கான்ட்ராக்டர்கள் ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் ஏரியில் இருந்து கிராவல் மண்ணை தோண்டி எடுத்து அதை தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக சுமார் 20 அடி ஆழத்திற்கு மேல் ஏரியில் பள்ளம் தோண்டி கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏரியில் தேங்கியிருந்த மழைநீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
இதனால் இந்த ஏரியை சுற்றிலும் உள்ள தனியார் கினறுகளில் நீர்மட்டம் மளமளவென குறைந்து தற்போது குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்கும் தண்ணீர் இல்லாமல் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடி நடவடிக்கை எடுத்து, ஏரியில் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி கிராவல் மண் தோண்டிய கான்ட்ராக்டர்களிடம் அபராதம் வசூலித்து, அதன் மூலம் தண்ணீர் வறண்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.
இது குறித்து, உடனடியாக நடக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.




