Close
மார்ச் 7, 2026 9:34 காலை

தனியார் கல்லூரிகளில் படிக்கும் 1,043 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, இலவச லேப்டாப்புகளை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,043 தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்தறை அமைச்சர் மதிவேந்தன் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில், தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டிஆர்ஓ சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு பேங்க் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., எம்எல்ஏ ராமலிங்கம், மாநகர மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதிர திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் உள்ள 15 தனியர் கல்லூரிகளைச் சேர்ந்த, 1,043 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கடந்த ஜன. 5ம் தேதி, சென்னையில், உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்து, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு முதற் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் கல்வி எவ்விதத்திலும் தடைபடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் தன்னார்வலர்களை வீட்டிற்கே அனுப்பி இடைநிற்றலை தடுக்க இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில்தான் நடைபெற்று வருகிறது. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் தோறும் ரூ. 1000 வழங்கி நாட்டிலே உயர் கல்வி அதிகமாக பயிலும் மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

கல்லூரி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உலகம் உங்கள்கையில் என்ற திட்டத்தின் மூலம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை மாணவ மாணவிகள் சரியாக பயன்படுத்தி, தேசிய அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் உயர் கல்வி படித்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top