சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசவாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தற்போது தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. சின்ன வெங்காயம் வயல்வெளிகளில் 1 கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ. 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலை கடும் சரிவால் விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்திட, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்.
மேலும், வெங்காய ஏற்றுமதிக்கான வரியை முற்றிலும் நீக்க வேண்டும். விவசாயிகளுக்கு உள்நாட்டு சந்தை விலையை விட கூடுதல் விலை கிடைப்பதற்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை அழைத்து பேசி, விரைந்து தீர்வு காண வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.




