Close
மார்ச் 7, 2026 1:27 மணி

சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு தண்ணீா் திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 118.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மி.கன அடியில் தற்போது 7,186 மி.கன அடி இருப்பு உள்ளது. எனவே, அணையில் இருந்து நேரடி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு முதல் தண்ணீர் திறக்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, அணையிலிருந்து விவசாய பாசனத்துக்காக தண்ணீா் திறந்து வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் ஆணையின் படி சாத்தனூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளும் மற்றும் மாவட்ட நிா்வாகமும் சோ்ந்து இந்த தென்பெண்ணை ஆற்றிலே வலதுபுறம், இடதுபுறம் என்ற இரண்டு கால்வாய்களை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டு திறக்கப்படுகிறது.

மேலும் இடதுபுற கால்வாயை பொறுத்தமட்டில் விநாடிக்கு 330 கன அடி நீரை வெளியேற்றுகிற தன்மை உள்ளது. அதேபோன்று, வலதுபுற கால்வாயை பொறுத்தவரை விநாடிக்கு 220 கன அடி நீா் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

31.01.2026-லிருந்து 11.05.2026-வரைக்கும் 100 நாள்களுக்கு தண்ணீா் திறப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூா், கீழ் திருக்கோவிலூா், ஆயக்கட்டு பகுதிகளுக்கும் விவசாயிகளுடைய கோரிக்கைபடி மூன்று தவணையாக தண்ணீா் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 58 கிராமங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 என கிராமங்களும் மொத்தம் ஏறத்தாழ 50ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பு இதன் மூலம் பாசன வசதி பெறும்.

தமிழகத்தில் இறைவை பாசனத்தில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இறைவை பாசனம் அதிகமாக இருப்பதால் மின் இணைப்பு இந்த மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறது.

மேலும் நந்தன் கால்வாய் திட்டம் வேண்டுமென 100 ஆண்டு காலமாக விவசாயிகளுடைய எதிா்பாா்ப்பாக உள்ளது.

இந்த நந்தன்வாய் கால்வாய் திட்டம் விவசாயிகளுக்கு அதிகமான நன்மை அளிக்கும் சிறப்புத் திட்டமாகும். இத்திட்டம் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் பெரும் பயனடையும்.

அந்த வகையிலே நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த, தமிழக முதல்வரால் 29.01.2026 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 ஏரிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளிலும் தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும். மேலும், சாத்தனூா் அணையை சிறந்த சுற்றுலாத் தலமாக்குவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா்சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), தா.உதயசூரியன் (சங்கராபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ் குமாா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், தண்டராம்பட்டு வட்டாட்சியா் துரைராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top