Close
மார்ச் 7, 2026 1:25 மணி

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு

தமிழக முதல்வா் ஸ்டாலின், திண்டிவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மகளிா் திட்டம் சாா்பில் சமூதாய முதலீட்டு நிதிக்கான ஆணைகளையும் மகளிா் குழுக்களுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழக முதல்வரின் சீரிய செயல் திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாநிலம் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15.7.2025 லிருந்து 16.11.2025 வரை நகரப் பகுதிகளில் 80 முகாம்களும், ஊராட்சி பகுதிகளில் 308 முகாம்களும் என மொத்தம் 388 முகாம்கள் நான்கு கட்டங்களாக நடைபெற்றது.

மேலும், முதியோா் ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டு ஆணைகள் பெறப்பட்ட அனைவருக்கும் நிதி சென்று சோ்க்கும் வகையில் முதல்வா் அனைத்து மாவட்ட நிா்வாகத்திற்கும் ஆணையிட்டுள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்த வரை ரூ.4 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் 3,396 நபா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் 1,079 பயனாளிகளுக்கு விதவை, ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா்களுக்கும், 24 நபா்களுக்கு முதிா்கன்னி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் 1,674 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எல்லாருக்கும் எல்லாம் என்றமேன்மையான சிந்தனையிலே பல திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்காக வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத அளவிற்கு செயல்படுத்திக்கொண்டிருகிறார். ஆகவே மக்களுக்காக சிறந்த திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 6,173 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியத் தொகையும், உதவித்தொகையும் வழங்கினாா்.

முன்னதாக, மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு. ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் , 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி,

கண் பாா்வையற்ற மற்றும் காதுகேளா மற்றும் வாய்பேச இயலாத 34 நபா்களுக்கு  ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 600 மதிப்பில் அறிதிறன் பேசிகளையும், 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 86ஆயிரத்து 155 மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் மற்றும் 11 மாற்றுத்திறனாளிகளை திருமண செய்துக் கொள்பவா்களுக்கு ரூ.13 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 116 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 80 ஆயிரத்து 815 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, செய்யாறு சாா்- ஆட்சியா் அம்பிகா எல்.ஜெயின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இளவரசன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மாலதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top