Close
மார்ச் 7, 2026 11:37 காலை

இந்திய விமானப்படைக்கு 5 ‘தேஜஸ்’ எம்கே1ஏ போர் விமானங்கள் தயார்

இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்சிஏ  தேஜஸ் எம்கே1ஏ போர் விமானத் திட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, 5 விமானங்கள் முழுமையாகத் தயாராக உள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து முக்கியத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளுடன் இந்த 5 விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. இவை மார்ச் 2026-க்குள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று எச்ஏஎல் உறுதி அளித்துள்ளது.

இந்தத் திட்டம் நீண்ட காலமாகத் தாமதமடைந்து வருவதற்கு அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் இன்ஜின்களை வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தற்போது வரை 5 என்ஜின்களை ஜிஇ நிறுவனம் வழங்கியுள்ளது.

மேலும் 9 எம்கே1ஏ விமானங்கள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, சோதனைப் பறப்புகளையும் மேற்கொண்டுள்ளன. அவற்றுக்கான இன்ஜின்கள் வந்தடைந்தவுடன், அந்த 9 விமானங்களும் உடனடியாக விநியோகத்திற்குத் தயாராகிவிடும்.

இன்ஜின் விநியோகம் இனி சீராக இருக்கும் என்றும், எச்ஏஎல் நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்திற்கு ஏற்ப அவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் தயாராக இருப்பதாக எச்ஏஎல் கூறினாலும், இந்திய விமானப்படை வரும் மே மாதத்தில் இந்தத் திட்டத்தைப் விரிவாக ஆய்வு செய்ய உள்ளது.

இந்திய விமானப்படை தனது பழைய மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக, மொத்தம் 180 தேஜஸ் எம்கே1ஏ விமானங்களை வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காகச் சுமார் ₹1.10 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாசிக் மற்றும் பெங்களூருவில் உள்ள உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுக்கு 24 விமானங்களை உற்பத்தி செய்ய எச்ஏஎல் இலக்கு நிர்ணயித்துள்ளது. 2033-க்குள் அனைத்து விமானங்களும் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top