எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் துலே மற்றும் நந்தூர் பார் மாவட்டங்களில் இயற்கை விவசாய முறையில் பருத்தியில் பூச்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
இதற்காக 6 இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எம் ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் லுப்பின் நிறுவனம் இணைந்து செயல்படுகின்றது.
லூபின் நிறுவனத்தைச் சேர்ந்த 12 அலுவலர்கள் லூபின் நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுனில் சைந்தானே மற்றும் சதானந் சின்ச்சகர் ஆகியோரின் தலைமையில் புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன பணிகளை பார்வையிட வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடுகளையும் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களைப்பற்றியும் விளக்கி கூறினார்.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்க எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை பற்றி செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி \மணிகண்டன், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மற்றும் அவற்றை முறையாக பயன்படுத்தும் முறைகளைப் பற்றி பயிற்சி அளித்தார்.
பின்பு, தவலப்பள்ளம் கிராமத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ட்ரைக்கோகிரம்மா என்ற ஒட்டுண்ணி பூச்சியின் உற்பத்தி செய்யும் மையத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஒட்டுண்ணி பூச்சியின் வளர்ப்பு முறை பற்றி நேரடி விளக்கங்களை முன்னோடி விவசாயி அதிசயநாதன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
வந்திருந்த அனைத்து அலுவலர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டு மருத்துவ முகாம் செயல்படும் முறை மற்றும் ஒட்டுண்ணி வளர்ப்பு முறை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொண்டனர்.
ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப்பாளர்கள் டி.விமலா மற்றும் கேஸ் பிரிட்டோ ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.




