Close
மார்ச் 7, 2026 11:31 காலை

நாமக்கல் கமலாலயக்குளத்தில் வரும் மார்ச் 5ம் தேதி தெப்பத்தேர் திருவிழா

நாமக்கல் நகரின் மத்தியில் உள்ள ஒரே கல்லினால் உருவான மலையின் அடிப்பகுதியில், கமலாலயக்குளம் அமைந்துள்ளது.

புராண காலத்தில் நாமகிரி லட்சுமித் தாயார் இந்த குளத்தின் கரையில் தவம் இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த ஆஞ்சநேயர் தன் கையில் கொண்டுவந்த சாலக்கிராமத்தை தாயார் கையில் கொடுத்துவிட்டு, குளத்தில் தண்ணீர் அருந்த சென்றதாகவும், அப்போது தாயார் அந்த சாலக்கிராமத்தை தரையில் வைத்ததால் அது நாமக்கல் மலையாக உருவெடுத்ததாக ஐதீகம் உள்ளது.

தற்போதும் கமலாலயக் குளத்தின் அடிப்பகுதியில் ஆஞ்சநேயரின் பாத சுவடுகளை காண முடிகிறது. நாமக்கல் மலைக்கு மேற்கு புறத்தில் மலையைக்குடைந்து அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் குடவைறைக் கோயிலாக அமைந்துள்ளது.

அதன் எதிரில் மலையையும் தெய்வங்களையும் வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் அருள் புரிந்து வருகிறார். மலையின் கிழக்குப்பகுதியில் அரங்கநாயகித்தாயார் உடனுறை ரங்காநதர் கோயில் குடவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்கு கார்க்கோடன் என்ற பாம்பின் மீது அனந்தசயன நிலையில் ரங்கநாதர் அருள்பாலித்து வருகிறார்.

முப்பெரும் தெய்வங்களைக் கொண்டுள்ள நாமக்கல்லில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பத்தேர் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு தமிழக அரசு அனுமதியின் பேரில், கடந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி தெப்பத்ததேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டு வருகிற மார்ச் 5ம் தேதி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு, கமலாலயக்குளத்தில் தெப்பத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. குளத்தில் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பாளர்கள்.

தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

தெப்பத்தேர் திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் மல்லிகா, ராமசீனிவாசன், ரமேஷ்பாபு, செல்வசீராளன் ஆகியோர் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top