தமிழக முதல்வர் உத்தரவின்படி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி பெண் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் சரோஜா மற்றும் சாந்தி ஆகியோருக்கு தூய்மை தங்கமலர் என்ற விருது வழங்கப்பட்டது. வீட்டு உரம் தயாரிக்கும் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சுமதிக்கு பசுமை காவலர் என்ற விருதும், டெங்கு ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய கனகா, மகேஸ்வரி ஆகியோருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
மாநகராட்சியில் தொழில் லைசென்ஸ் கட்டணம் வசூல் செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றிய தீபிகா, உமா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரிக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், ஜான் ராஜா, சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.




