Close
மார்ச் 10, 2026 7:04 மணி

இஸ்ரேல்-ஈரான் போரால் கேஸ் இறக்குமதி பாதிப்பு: 25 சதவீதம் கேஸ் டேங்கர் லாரிகள் ஓடவில்லை

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் பதட்டம் காரணமாக கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சுமார் 25 சதவீதம் எல்பிஜி டேங்கர் லாரிகள் லோடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ. 25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சங்க உறுப்பினர்களுக்கு சுமார் 4 ஆயிரம் புல்லட் கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய ஆயில் கம்பெனிகளுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர்களில் கேஸ் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் எடுத்துச்செல்லும் பணிக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரமாக, அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வருவதால் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கேஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட கேஸ் டேங்கர் லாரிகள் லோடு இல்லாமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதே நிலை நீடித்தால் இந்தியா முழுவதும் வீடுகளுக்கு சமையல் கேஸ் விநியோகம் பாதிக்கப்படும். இதனால் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் சுமார் ரூ. 25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top