Close
மார்ச் 15, 2026 7:40 மணி

கலசபாக்கம் அருகே புதிய டயர் யூனிட் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகில் மோட்டூர் ஊராட்சியில் ரூ 1.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயர் யூனிட்டை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் ஶ்ரீதர், தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் தியாகராஜன், அனைவரையும் வரவேற்றார்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் புதிய டயர் யூனிட்டை திறந்து வைத்து பேசியதாவது,

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மோட்டூர் ஊராட்சியில் உள்ள பேருந்து பணிமனை அப்போது இருந்த சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தொடங்கி வைத்து அதன் பணிகள் சில மாதங்களில் நின்று விட்டது நீண்ட ஆண்டுகளாக எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருந்த நிலையில் கடைசி வரை அதை திறந்து வைக்க முயற்சி செய்தனர்

ஆனால் கடந்த 20 ஆண்டு காலமாக முயற்சி செய்து பணிமனையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்காமல் விட்டுவிட்டனர். அதன் பின்னர் பேருந்து பணிமனை அமைக்க முடியாது, இந்த இடத்தில் டயர் யூனிட் அமைக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவச்சந்திரன், சட்டமன்றத்தில் கூறினார்.

டயர் யூனிட் அமைப்பதற்கும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதி வழங்கினால் இந்த இடத்தில் புதிய டயர் யூனிட், டயர் தயாரிக்க முடியும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தனர்.

அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினிடமும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவச்சந்திரனிடமும், தொடர்ந்து கோரிக்கை வைத்து இந்த இடத்தில் புதிய டயர் யூனிட் அமைப்பதற்கு பணிகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கி வைக்கப்பட்டு அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது.

இப்பொழுது புதிய டயர் தயாரிக்கும் அளவில் போதுமான அனைத்து வசதிகளும் அமைந்துள்ளதால் முதலமைச்சரிடமும் துணை முதலமைச்சரிடமும் அமைச்சர் பெருமக்களின் பரிந்துரையின்படி இப்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, சேத்பட், செங்கம், ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து பணிமனையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் டயர் புதுப்பிக்க வேண்டும் என்றால் வேலூர் அல்லது விழுப்புரம் சென்று தான்மாற்ற வேண்டிய நிலை இருந்தது.

இந்த புதிய டயர் யூனிட் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேருந்து பணிமனைகளில் உள்ள பேருந்துகள் அனைத்தும் புதிய டயர் தயாரித்தல், புதிய டயர் மாற்றுதல், டயர் புதுப்பித்தல் பணிகளை செய்து கொள்ளலாம். இதன் மூலம் தொலைதூர பயணமும் குறையும் பணி சுமையும் குறையும் என்றார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மகளிர் விடியல் பயணம் செய்யும் வகையில் 2 பேருந்து வழித்தடத்தை ஆட்சியர் தர்ப்பகராஜ் ,சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதேபோல் புறநகர் பேருந்து மூலம் போளூர் முதல் பட்டியந்தல் வரை ஆதமங்கலம் புதூர் வழியாக செல்லும் இந்த இரண்டு வழித்தடங்கள் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தொமுச மண்டல செயலாளர் சௌந்தர்ராஜன், துணை மேலாளர் தொழில்நுட்பம் சீனிவாசன், உதவி பொறியாளர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் அ.சிவக்குமார், வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top