திருவண்ணாமலைகிரிவலப்பாதையில் புதியதாக 3 ஒப்பனை அகம் ரூ.2.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், சி.என். அண்ணாதுரை எம்பி, மு.பெ.கிரி எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கட்டிடங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் திருவண்ணாமலை திருக்கோயில் கிரிவலத்திற்கு வருகை தரும் ஆன்மிக பக்தர்கள் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய ஒப்பனை அகம் கட்டடங்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் சீனுவாச பள்ளி அருகே ஒரு ஒப்பனை அகம், குபேரலிங்கம் அருகே ஒரு ஒப்பனை அகம், அரசு நுகர்வோர்வாணிப கழகம் எதிர்புறத்தில் ஒரு ஒப்பனை அகம் என 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு இடத்திற்கு ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் ஒப்பனை அகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பனை அகத்தில் பொதுமான அளவிற்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி கழிப்பறை, குளியறை மற்றும் உடை மாற்றும் அறை போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடங்கள் முழுவதும் தனியார் நன்கொடையின் மூலம் கட்டப்பட்டதாகும். இவை அமைய காரணமாக இருந்த அருணை கன்ஸ்ட்ரஷன், எபியு கன்ஸ்ட்ரஷன், அருணை கல்வி குழுமம் ஆகியவற்றுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் நகர மன்ற தலைவர் ஶ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.ஆர். மணி, மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாநகர பகுதி பொறுப்பாளர்கள் விஜி (எ) விஜயராஜ், வழக்கறிஞர் சீனிவாசன், சண்முகம், அரசு ஒப்பந்ததாரர் அருணை துரைவெங்கட், மாநகராட்சி துணைமேயர் ராஜாங்கம், மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




