Close
ஜூலை 9, 2026 11:25 மணி

2027 பொங்கல் பரிசு: புதிய வடிவமைப்பில் தரமான வேட்டி, சேலைகள்

தமிழகத்தில் உள்ள சுமார் 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வரும் 2027-தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தரமான வேட்டி-சேலைகளைப் பரிசாக வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக வேட்டி, சேலைகளின் வடிவமைப்பிலும் , துணியின் தரத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் பொங்கல் பண்டிகையை மிக மகிழ்ச்சியாகவும், கம்பீரமாகவும் கொண்டாடும் வகையில், தற்போதைய ஆடைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி புதிய வேட்டிகள் மற்றும் சேலைகளில் தங்கம், வெள்ளி அல்லது தாமிர நிறத்திலான பாலியஸ்டர் ஜரிகை பார்டர்கள் இடம்பெறவுள்ளன. வழக்கமாக வழங்கப்படும் நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு  மற்றும் தந்த நிறம் ஆகியவற்றுடன் சேர்த்து, இந்த முறை பச்சை மற்றும் பல பிரகாசமான வண்ணங்களிலும் சேலைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

சேலைகளில் பாலியஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை விகிதம் மேம்படுத்தப்பட்டு ‘பாலிகாட் நூல்’ பயன்படுத்தப்படவுள்ளது. இது துணியை மிகவும் மென்மையாகவும், கோடைகாலத்திற்கு ஏற்றவாறும் மாற்றும்.

ரேஷன் கடைகள் மூலம் இந்த இலவச வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும். இதற்கான கொள்முதல் பணிகளை மேற்கொள்ளக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமன்றி, முதியோர் உதவித்தொகை பெறும் மூத்த குடிமக்கள் மற்றும் சமூக நலத்துறையின் பிற பயனாளிகளுக்கும் இந்த இலவச வேட்டி-சேலைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் (அரிசி, கரும்பு, முந்திரி, வெல்லம் மற்றும் ரொக்கப் பணம்) சேர்த்து இந்த ஆடைகளும் இலவசமாக வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், கொள்முதல் மற்றும் உற்பத்திப் பணிகளைத் தமிழக அரசு இப்போதே முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அரசின் இந்த விரைவான நடவடிக்கையால், தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறைத் தொழிலாளர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தங்குதடையின்றித் தொடர் வேலைவாய்ப்பு உறுதியாகியுள்ளது.

ஏழை, எளிய குடும்பங்கள் பொங்கல் திருநாளைப் புத்தாடை உடுத்திச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு மாற்றம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top