தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முக்கிய திருக்கோயில்களில் இன்று முதல் செல்போன்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட 52 முதுநிலைத் திருக்கோயில்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
கோயில்களின் புனிதத் தன்மையையும் ஆன்மீகச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் மூலம் இறைவனின் திருவுருவங்களைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செல்பி எடுத்தல் மற்றும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவேற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு கோயில்களின் புனிதமும் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் வந்தன.
வரிசையில் நின்று காத்திருக்கும்போது செல்போனில் இசை கேட்டல், விளையாட்டு விளையாடுதல் அல்லது உரையாடுதல் ஆகியவை மற்றவர்களின் வழிபாட்டைத் தொந்தரவு செய்வதாகவும் கருதப்பட்டது.
இதனால் பக்தர்கள் முழுமையாக இறைவனைத் தியானித்து அமைதியாகத் தரிசனம் செய்யும் வாய்ப்பை உருவாக்க இந்தத் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்ட மேலாண்மைக்கும் இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், பக்தர்கள் தங்கள் கைபேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் நுழைவு வாயில்கள், கோபுர வாசல்கள் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செல்போனுக்கும் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு ரசீது அல்லது டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
தடையை மீறி யாரேனும் கோயிலுக்குள் செல்போன்களை மறைத்து எடுத்துச் சென்றால், அந்தச் செல்போன்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருக்கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அவசரத் தேவைகளுக்காகவும், முதியவர்கள் மற்றும் பக்தர்களுக்கு உதவவும் கோவில் வளாகத்திற்குள் கூடுதல் தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணை ஆணையர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய விரும்பு பக்தர்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கோவில் வாசலில் அமைக்கப்பட்ட செல்போன் பாதுகாப்பு மையத்தை கோவில் இணை ஆணையர் தரணிதரன் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் கோவில் மேலாளர் செந்தில் மற்றும் தன்னார்வலர்கள் ,கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





