Close
அக்டோபர் 2, 2024 10:36 மணி

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம்: திருச்சி என்ஐடி யில் துவக்கம்

திருச்சி என்ஐடியில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி தி்ட்டம் துவக்க விழா நடைபெற்றது.

இந்திய கல்வி அமைச்சகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) முன்னெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் தென்மண்டல குழு  திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்திற்கு ஒரு அலகு (50 இருக்கைகள் ) இடைநிலை அளவில் மாணவர் சேர்க்கைக்கான‌ அங்கீகாரம் வழங்கியது.  இதன் மூலம் 2024-2025 கல்வியாண்டிற்கான  மாணவர் சேர்க்கை தேசிய பொது நுழைவுத்தேர்வு மூலம் தகுதியுள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த படிப்பிற்கான துவக்க விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமையன்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். மு.கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் முனைவர் அகிலா முன்னிலை வகித்தார். முனைவர்.சி.வேல்மதி, தலைவர் (ITEP) வரவேற்புரையாற்றினார். இறைவணக்கத்துடன் குத்துவிளக்கேற்றி நிகழ்வு தொடங்கியது.

இயக்குநர் அகிலா  தனது தலைமையுரையில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்ட சேர்க்கை குழுவினரை பாராட்டி புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்று வாழ்த்தினார். கல்வி புலத் தலைவர் முனைவர்.எஸ்.டி.ரமேஷ்  ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் மூன்றாண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பு (கணிதம், இயற்பியல், வேதியியல்) மற்றும் நான்காண்டு பி.எஸ்சி, பி.எட் என சிறப்பு வாய்ப்புகள் இருப்பதை விளக்கினார்.

சிறப்பு விருந்தினர் முனைவர்.மு.கிருஷ்ணன் ஒன்றிணைத்தல், நிலைத்தன்மை மற்றும் தேசத்தை கட்டி எழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தினார். மேலும், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பள்ளிகளில் கற்பிக்க தேவையான திறன்கள் மற்றும் அறிவை பெறுவதில் கவனம் செலுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பல்வேறு புலத்தலைவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் பங்கேற்று பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் திட்டத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து எடுத்துரைத்தார்கள். முனைவர் நா.ரவீந்திரன் நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் துவக்க விழா இனிதே நிறைவுற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top