நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 11.43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனருமான ஆசியா மரியம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை ருசித்துப் பார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கோனூர் கிராமத்தில், ரூ. 3.46 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன கட்டிடம், ப.வேலூர் தாலுகா, பிள்ளைகளத்தூரில் ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி நிறுவனம், கூடச்சேரி ஊராட்சியில், நெடுஞ்சாலை துறை சார்பில், ரூ. 5 கோடி மதிப்பில் மாவுரெட்டிபட்டி & எஸ்.புதுப்பாளையம் சாலை வரை, புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணியை அவர் பார்வையிட்டார்.
மேலும், பரமத்தி மற்றும் ப.வேலூர் பேரூராட்சிகளில் ரூ. 24.20 கோடி மதிப்பில், ஆரம்ப சுகாதார நிலையம், 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பிரிவை அவர் ஆய்வு செய்தார்.
நஞ்சை புகளூரில், காவிரி ஆற்றின் குறுக்கே, ரூ. 406.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கதவணை பணி, வாரச்சந்தை கட்டுமான பணி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளையும் கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குறித்த காலத்திற்குள் பணிகளை முடிப்பதுடன், தரமாக அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது டி.ஆர்.ஓ. சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



