Close
மார்ச் 7, 2026 12:06 மணி

தாயுமானவர் திட்ட துவக்க விழாவில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக அரசின் தாயுமானவர் துவக்க திட்ட விழாவில், ரூ. 3.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக்கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக்கல்வித் துறை, முன்னாள் படைவீரர் நலன் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதவாது: தமிழ்நாடு முதலமைச்சர், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில், குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, அக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றலின்றி கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் “அன்புக்கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2.80 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top