Close
ஜூன் 16, 2025 11:47 மணி

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் எதிரொலி: தானாக வெளியேறும் இந்திய மாணவி

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக மாணவர் விசா ரத்து செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் தானாகவே நாட்டை விட்டு வெளியேறுகிறார்

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின்படி, “ரஞ்சனி சீனிவாசன் ஒரு பயங்கரவாத அமைப்பான ஹமாஸை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 5, 2025 அன்று, வெளியுறவுத்துறை அவரது விசாவை ரத்து செய்தது . மார்ச் 11 அன்று சுயமாக நாடு கடத்த கஸ்டம்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி செயலியைப் பயன்படுத்திய வீடியோ காட்சிகளை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது,” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு தானாக முன்வந்து வெளியேறுவது, சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த நாடுகடத்தப்பட்டவர்களைப் போல அமெரிக்க இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படும் அபாயத்தைத் தவிர்க்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், எக்ஸ் பதிவில் விமான நிலையத்தில் ரஞ்சனியின் வீடியோவை காணொளியை வெளியிட்டு, “வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் நாட்டில் இருக்கக்கூடாது. அமெரிக்காவில் வாழவும் படிக்கவும் விசா வழங்கப்படுவது ஒரு பாக்கியம். நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, ​​அந்த சலுகை ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் நீங்கள் இந்த நாட்டில் இருக்கக்கூடாது. கொலம்பியா பல்கலைக்கழக பயங்கரவாத ஆதரவாளர்களில் ஒருவர் சுயமாக நாட்டை விடு வெளியேறுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று கூறினார்.

ரஞ்சனி சீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவி. பள்ளியின் வெப்சைட்டின்படி , அவர் கொலம்பியாவின் கட்டிடக்கலை, திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு பட்டதாரி பள்ளியில் ஆராய்ச்சி செய்து வந்தார். அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், ஃபுல்பிரைட் நேரு மற்றும் இன்லாக்ஸ் உதவித்தொகைகளுடன் ஹார்வர்டில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.காலநிலை மாற்றத்தால் ஆபத்தில் உள்ள எல்லைப்புற சமூகங்கள்” குறித்து வாஷிங்டனில் உள்ள சுற்றுச்சூழல் ஆதரவு இலாப நோக்கற்ற நிறுவனத்திலும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேற்கு பிலடெல்பியா நிலப்பரப்பு திட்டத்தின் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர் போராட்டங்களில் கொலம்பியா பல்கலைக்கழகம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வாரம், கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் முன்னணியில் இருந்த பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் கொலம்பியா மாணவர் மஹ்மூத் கலீல் என்பவர் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கிரீன் கார்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீதிபதி கலீலின் நாடுகடத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

மற்றொரு கொலம்பியா பல்கலைக்கழக மாணவியான லெகா கோர்டியா, தனது மாணவர் விசாவைத் தாண்டியும் தங்கியிருந்ததற்காக அதிகாரியால் கைது செய்யப்பட்டார். நியூயார்க்கில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top